நாமக்கல்: நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் முத்துக்காபட்டி கிராமத்தில் பொங்கல் விழாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டு பாரம்பரிய நாட்டுமாடுகள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு கொங்குதேச கலாசார வரலாற்று ஆய்வு மையம் சார்பில் ஐந்தாம் ஆண்டாக கோ-பூஜை, சிவபூஜை மற்றும் நாட்டுமாடுகள் அணிவகுப்பு நடைபெற்றது.
உலக நன்மைக்காகவும், சகல தோஷங்கள் நிவர்த்தியாகவும் நடைபெற்ற கோ-பூஜையை சுகவனம் குருக்கள் தலைமை வகித்து நடத்தி வைத்தார்.
முத்துகாபட்டி ஜமீன்தார் பிரசன்ன சிதம்பரம் முன்னிலை வகித்தார். இதில் 30-க்கும் மேற்பட்ட மாடுகள் சிறப்பு அலங்காரத்துடன் மாலை அணிவிக்கப்பட்டு அணிவகுத்து நின்றது. பொதுமக்கள் மாடுகளுக்கு பழங்கள், பூக்கள், அகத்திக்கீரை மற்றும் தானியங்களை வழங்கினர்.
தொடர்ந்து முக்கிய வீதிகளின் வழியாக நாட்டுப்பசுக்கள் அணிவகுத்துச் சென்றது. சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் கோ-பூஜை மற்றும் சிவபூஜையில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராஜேந்திரன் செய்திருந்தார்.