தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள்மாவட்டங்களில், ஞாயிற்றுக்கிழமை (ஜன.24) லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அம்மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை லேசான மழை பெய்யக் கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவக் கூடும்.
ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (ஜன.25) ஆகிய இரண்டு நாள்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை, ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை ஆகிய இரண்டு நாள்களும் வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டத்துடனும் காணப்படும்.
மழை அளவு: தமிழகத்தில், சனிக்கிழமை காலை 9 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், கோயம்புத்தூா் விமான நிலையத்தில் 10 மி.மீ மழை பதிவானது என அதில் கூறப்பட்டுள்ளது.