அவிநாசியில் மின்மாற்றியில் உயிரிழந்து கிடந்த இளைஞரின் உடலை மீட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவிநாசி திருப்பூர் சாலை அவிநாசிலிங்கம்பாளையம் புறவழிச்சாலை அருகே மின்மாற்றி உள்ளது. இதில் 25 வயதுமிக்க இளைஞர் உயிரிழந்த கிடப்பதாக திங்கள்கிழமை காலை தகவல் வெளியானது.
இதையறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அவிநாசி சிறப்புக் காவலர் மயில்சாமி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகியோர் ஒருவழியாக மின்மாற்றியின் மீது ஏறி உயிரிழந்து கிடந்த இளைஞரின் உடலை மீட்டனர். இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், வட மாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
இவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அவினாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மின்மாற்றியில் உயிரிழந்து கிடந்த இளைஞரின் உடலை மீட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிறப்புக் காவலர் மயில்சாமி ஆகியோருக்கு பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.