அவிநாசி அருகே கருவலூரில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் அரசு சார்பில் கௌரவிக்கப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சியைச் சேர்ந்த சாமி மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர், அன்றைய சுதந்தர போராட்ட கால ஜீவகாருண்ய சங்கத்தின் நிர்வாகியான தியாகி சிதம்பரம் தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும் சாமி மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் காந்தியோடு இணைந்து உப்பு சத்தியாகிரகம், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டனர். இதில் சாமி அவர்கள் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சிறையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை அனுபவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சுதந்திரம் அடைந்த பிறகு இவருக்கு, இந்திய அரசு சார்பில் தாமரை பட்டயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதேபோல கருவலூர் சுப்பிரமணியம், அவிநாசி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி ஆகியோரும் சுதந்திரப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
இவர்களை பாராட்டும் வகையில் குடியரசு தினத்தை ஒட்டி, செவ்வாய்க்கிழமை தியாகி சாமி அவர்களின் பேரன் குமரவேல் (அவிநாசி துணை வட்டாட்சியர் ஓய்வு), தியாகி சுப்பிரமணி அவர்களின் மகன் மகாதேவன், அவிநாசி பகுதியைச் சேர்ந்த தியாகி பழனிசாமி அவர்களின் மனைவி பேச்சியம்மாள் ஆகியோருக்கு, அரசு சார்பில், அவிநாசி வருவாய்த்துறையினர் கதர் ஆடை அணிவித்துக் கௌரவித்தனர். இதில் துணை வட்டாட்சியர் தமி தமிழேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் யுகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.