தஞ்சாவூர் மாவட்டம், அம்மன்பேட்டை ராமகிருஷ்ண விவேகானந்த சேவாஸ்ரமத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கிருஷ்ணானந்த மகராஜ் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம், விவேகானந்தா சேவா சங்கம் ஆகியவை வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து அகில பாரதிய சன்னியாசிகள் சங்க நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ராமானந்தா, ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமத் சுவாமி வேதாந்தா ஆனந்தா தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் அருகிலுள்ள அம்மன்பேட்டையில் ராமகிருஷ்ண விவேகானந்த சேவாஸ்ரமம் உள்ளது. அதன் தலைவராக ஸ்ரீமத் கிருஷ்ணானந்த மகராஜ் (75) உள்ளார். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு மர்ம நபர்கள், ஆசிரம வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பக்தரின் மோட்டார் சைக்கிளில் வயர்களை கழற்றியபடி இருந்தனர்.
இதுகுறித்து கேட்ட சுவாமி கிருஷ்ணானந்தாவை மர்ம நபர்கள் தாக்கியதால், அவர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் உடனடியாக விசாரித்து, அவர்களைக் கைது செய்ய வேண்டும். மேலும் ஆஸ்ரம பகுதியில் காவல் துறையினரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.