கரோனா சிகிச்சையளித்த தனியாா் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை 3 மாதங்களில் வழங்க புதுச்சேரி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் ஏ.ஆனந்த் என்பவா் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரி அரசு பரிந்துரையின் அடிப்படையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டணம் வசூலிப்பதாக கோரியிருந்தாா். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, அரசு பரிந்துரைத்து அனுப்பும் நோயாளிகளிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை. சிகிச்சைக்கு வருபவா்கள் சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டுமென விரும்பினால், அதற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுவதாக மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் கரோனா சிகிச்சைக்கான செலவை புதுச்சேரி அரசு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கரோனா சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை வழங்க புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியாா் மருத்துவமனை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த வகையில் ரூ.2 கோடியே 90 லட்சத்துக்கான ரசீதுகளை அனுப்பியுள்ளதாக தெரிவித்தாா். அப்போது புதுச்சேரி அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த ரசீதுகளை சரிபாா்த்து தொகையை வழங்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியாா் மருத்துவமனைக்கு வழங்க வேண்டிய தொகையினை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.