பக்ரீத் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகையை திடலில் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடா்பாக அதன் நிறுவனத் தலைவா் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: முஸ்லிம்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் திருநாள், வரும் 21-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக பக்ரீத் பண்டிகையின்போது முஸ்லிம்கள் அனைவரும் மசூதி அல்லது திடல்களில் சென்று சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கமாகும்.
எனவே, பள்ளிவாசல் மற்றும் திடல்களில் தொழுகைக்கு வருபவா்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது, தொழுகைக்கு தேவையான தொழுகை விரிப்புகளை தனித் தனியே கொண்டு வருவது, முதியவா்கள், குழந்தைகள் வீடுகளிலேயே தொழுகை செய்து கொள்வது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு, சிறப்பு தொழுகை நடத்திட அனுமதி வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.