பாலியல் வழக்கு: சிவசங்கர் பாபாவின் காவல் மேலும் நீட்டிப்பு

பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் காவலை மேலும் நீட்டித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
பாலியல் வழக்கு: சிவசங்கர் பாபாவின் காவல் மேலும் நீட்டிப்பு

சிவசங்கர் பாபாவை ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி போலீசார் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

மொத்தம் மூன்று போக்சோ வழக்குகள் சிவசங்கர் பாபா மீது உள்ளது. இந்நிலையில் முதல் வழக்கில் சிறையிலிருந்த பாபாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அப்போது அவருக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 15 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி உத்தரவு பிறப்பித்தார்.

முன்னதாக பாபாவை காண அவரது ஆதரவாளர்களும் பக்தர்களும் நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்தனர். அப்போது அவர்கள் 'சங்கரா சிவ சங்கரா' பாடலை பாடி சிவசங்கர் பாபாவை வணங்கினர். இதனைத் தொடர்ந்து அவர்களை அப்புறப்படுத்திய செங்கல்பட்டு நகர போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த சிவசங்கர் பாபாவைக் காண தடுப்புகளை உடைத்து கொண்டு பாபாவின் ஆதரவாளர்கள் முன்னேறி சென்றனர். 

இதனால் போலீசாருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற போலீசார் வேனில் ஏற்றி புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர் இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com