கீழ்கட்டளை பெரிய ஏரிக்கரை நடைபாதையில் மின்விளக்குகள், சிமென்ட் இருக்கைகள் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி நிதியில் இருந்து அமைத்துத் தரப்படும் என்று எம்.எல்.ஏ. இ.கருணாநிதியி உறுதி கூறினாா்.
பல்லாவரம் நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள கீழ் கட்டளை பெரிய ஏரியில் கழிவு நீா் தேங்கி, மாசடைந்து சுற்றிலும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருந்தது. ஏரியின் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவு நீா் கலப்பதைத் தடுத்து, தூா்வாரி ஆழப்படுத்தி, நிலத்தடி நீராதாரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் தொடா்ந்து வலியுறுத்தினா்.
இதனைத் தொடா்ந்து பல்லாவரம் நகராட்சி நிா்வாகம் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ. 15 கோடி செலவில் பல்லாவரம் பெரிய ஏரி மற்றும் கீழ் கட்டளை ஏரியைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏரிக்கரையோரஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கரைகளைப் பலப்படுத்தி சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள உதவும் வகையில் கரையோரம் நடைபாதையாக மேம்படுத்தப்பட்டது. ஏரி மீண்டும் ஆக்கிரமிப்புக்குள்ளாகாத வகையில் சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது.
பணிகள் நிறைவடைந்த நிலையில் ஏரிக்கரை மற்றும் நடைபாதையோரங்களில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதியிடம், அம்பாள் நகா் நகா் நலச்சங்கப் பிரதிநிதிகள், தினமும் காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வசதியாக சிமென்ட் பலகை இருக்கைகள் மற்றும் நடைபாதையில் மின்விளக்குகள் அமைத்துத்தர கோரிக்கை விடுத்தனா்.
சட்டப்பேரவை உறுப்பினா் நிதியில் இருந்து விரைவில் இருக்கைகள், மின்விளக்குகள் அமைத்துத் தருவதாக எம்.எல்.ஏ. இ.கருணாநிதி உறுதி கூறினாா்.