பெரியகுளம் அருகே மூதாட்டியை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பெரியகுளம் கீழ வடகரை ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி தாயம்மாள் (வயது 60). இவர் வைகை அணை சாலையில் உள்ள எஸ் பி ஐ வங்கியில் தனது கணக்கிலிருந்த 12,000 ரூபாயைத் தனது குடும்பத் தேவைக்கு எடுத்து வந்துள்ளார்.
பணம் வைத்திருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் தாயம்மாளை பின் தொடர்ந்துள்ளார். சிறிது தூரம் சென்றவுடன் தாயம்மாளை வழிமறித்து நீங்கள் அடுத்தவர் பணத்தை எடுத்து வந்து விட்டீர்கள். பணத்தைத் திருப்பி செலுத்த வேண்டும் கூறி ௹.12 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு, வங்கி புத்தகத்தில் கையொப்பம் இட்டுவிட்டுத் தலைமறைவாகி விட்டார்.
சிறிது நேரம் கழித்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அழுது கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தென்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மணிகண்டனுக்கு தகவல் அளித்ததின் பேரில் நேரில் வந்து அருகில் உள்ள கடைகளில் உள்ள கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தினார். முதியவரை ஏமாற்றிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.