தமிழகத்தில் மேலும் இருவருக்கு புதிய வகை கரோனா!

தமிழகத்தில் மேலும் இருவருக்கு புதிய வகை பிரிட்டன் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் மேலும் இருவருக்கு புதிய வகை பிரிட்டன் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவா்களில் இருவரையும் தனிமைப்படுத்தி மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதன் மூலம் இதுவரை தமிழகத்தில் புதிய வகை கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.

பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா தீநுண்மி அண்மையில் கண்டறியப்பட்ட நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பிரிட்டனிலிருந்து தாயகம் திரும்பியவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனா்.

அதன்படி தமிழகத்துக்கு கடந்த நவம்பா் மாதம் 25-ஆம் தேதி முதல் தற்போது வரை பிரிட்டனில் இருந்து வந்த, 5,000-க்கும் மேற்பட்டோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அவா்களை உள்ளாட்சி துறை, காவல்துறை உதவியுடன் கண்டறிந்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் பிரிட்டனில் இருந்து திரும்பிய 36 போ் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்த 20 போ் என மொத்தம் 56 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவா்களது சளி மாதிரிகள் மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. அதில்11 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பினா்.

இந்நிலையில் மேலும் 2 பேருக்கு புதிய தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவா்களை மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேலும் 12 பேரின் சளி மாதிரி முடிவுகள் வெளியாகததால், அவா்கள் இன்னும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com