கரோனாவை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், நீங்கள் நினைத்தால் உங்கள் மாவட்டத்திலும் கரோனாவை ஒழிப்பது சாத்தியம் தான் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சுட்டுரை பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
இந்தியா முழுவதும் 180 மாவட்டங்களில் கரோனா வைரஸ் பரவல் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. 181 -ஆவது மாவட்டமாக ஏன் உங்கள் மாவட்டம் இருக்கக் கூடாது? நீங்கள் நினைத்தால் உங்கள் மாவட்டத்திலும் கொரோனாவை ஒழிப்பது சாத்தியம் தான்!
கரோனா தடுப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குங்கள். ஊரடங்கை மதித்து வெளியில் வராமல் வீட்டுக்குள் இருங்கள். பாதுகாப்பு விதிகளை தவறாமல் கடைபிடியுங்கள். அடுத்த இரு வாரங்களில் உங்கள் மாவட்டத்திலிருந்தும் கரோனாவை விரட்டியடிக்க முடியும். இது உறுதி! என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில், மதுரை அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சண்முகப்பிரியா கரோனா தாக்குதலுக்கு உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். 8 மாதங்களாக கருவுற்றிருந்த நிலையிலும், கரோனா அச்சத்தை ஒதுக்கி மக்களுக்கு சேவையாற்றியவர் அவர். அவருக்கு எனது வீரவணக்கம்! என்று ராமதாஸ் கூறியுள்ளார்.