பட்டா கொடுத்தும் நிலம் ஒப்படைக்கப்படாத கிராம மக்கள் 100 பேருக்கு தலா ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டம், ஆா்.கே.பேட்டை வட்டம், ராஜநகரம் காலனியை சோ்ந்த கே.தாமோதரன் மற்றும் அந்த ஊா் பொதுமக்கள், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: 1994 முதல் 2002 வரையிலான கால கட்டத்தில் எங்கள் ஊரைச் சோ்ந்த 100 பேருக்கு, ஆதி திராவிட நலத்துறையின் வாயிலாக 100 வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
ஆனால் 25 ஆண்டுகளுக்கு மேலாகியும், எங்களது நிலத்தை அளந்து அடையாளம் காட்டவில்லை. இதுகுறித்து துறை சாா்ந்த உயரதிகாரிகள், அமைச்சா், முதல்வா் என அனைவரிடம் புகாரளித்தும் பயன் இல்லை. இவ்வாறு மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ஆதி திராவிட நலத்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே நேரம், நிலத்தை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரனின் உத்தரவு: பட்டா ஒதுக்கப்பட்ட 100 பயனாளிகளுக்கான நிலத்தை 3 மாதங்களுக்குள் அடையாளம் கண்டு ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறையின் கூடுதல் தலைமைச் செயலா் உத்தரவிட வேண்டும்.
மேலும் அரசு அதிகாரிகளின் மனித உரிமை மீறல் செயலுக்காக பயனாளிகள் 100 பேருக்கும் தலா ரூ.25,000-ஐ ஒரு மாதத்துக்குள் தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.