சிதம்பரம்: நியாயவிலைக்கடைகள் மூலம் தமிழக மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்க மத்திய அரசின் சார்பில் தெலங்கானாவில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1400 டன் அரிசி சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை வந்தடைந்தது.
இந்தியாவில் தற்போது கரோனோ 2 -ஆவது கட்ட பரவல் தீவிரமடைந்து உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளன. ஊரடங்கின் போது ரேஷன்கடைகள் மூலம் அரிசி இலவசமாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் படி மத்திய அரசு தொகுப்பு மூலம் தெலங்கானா மாநிலத்தில் இருந்து 23 பொட்டி சரக்கு ரயில் மூலம் 1400 டன் அரிசி சிதம்பரம் ரயில் நிலைய சேமிப்பு கிடங்கிற்கு புதன்கிழமை வந்தடைந்தன.
அவற்றை லாரிகள் மூலம் சிதம்பரத்தில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் மூலம் நியாயவிலைக் கடைகளுக்கு அரிசி மூட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். முன்னதாக, கிடங்கு மேலாளர் துளசிராமன் மேற்பார்வையில், இந்திய உணவு கழக மேலாளர் ராமலிங்கம், உதவியாளர் சரவணன் மற்றும் பாலாஜி ஆகியோர் அரிசி மூட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
படவிளக்கம்- சிதம்பரம் ரயில் நிலையத்தில் தெலுங்கானா மாநிலத்திலிருந்து வந்த அரிசியை இறக்கும் இந்திய உணவு கழகத்தினர்.