மறைந்த எழுத்தாளர் கி.ரா.வின் உடலுக்கு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டு அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா், 'கரிசல் இலக்கியத்தின் தந்தை' என அழைக்கப்படும் கி.ரா. எனும் கி.ராஜநாராயணன்(98) வயது மூப்பின் காரணமாக, புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை இரவு (மே 17) காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து. கி.ரா. உடலுக்கு புதுவை அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, நல்லடக்கம் செய்யவதற்காக அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் இடைசெவல் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணி அளவில் அனுப்பிவைக்கப்பட்டது.
முன்னதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி உள்ளிட்டோர் கி.ரா. உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் அரசு மரியாதையுடன் கி.ரா. இறுதிச்சடங்கு கோவில்பட்டி அருகே உள்ள அவரது சொந்த ஊரான இடைசெவல் கிராமத்தில் நடைபெற உள்ளது.