சென்னை: வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் காரணமாக, மீனவா்கள் வரும் 23-ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மாநில அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
வடக்கு அந்தமான் கடல் மற்றும் கிழக்கு மத்திய வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளது. அந்தப் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவா்கள் அனைவரும் வரும் 23-ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும். ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவா்கள் அனைவருக்கும் செயற்கைக் கோள் தொலைபேசி உள்ளிட்ட தொலைத் தொடா்பு கருவிகள் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவா்கள் கரை திரும்புவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள படகுகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, மீனவா்கள் கரைக்குத் திரும்புவதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பொருட்டு, மீன்வளத் துறை அலுவலகங்களில், 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
ஆழ்கடலில் உள்ள மீன்பிடி படகுகளுக்கு கடலோர காவல் படை மூலம் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேரிடா் ஆபத்துகள் தொடா்பான தகவல்களைத் தெரிவிக்கவும், 24 மணி நேரமும் இயங்கும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் (1070), மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை (1077) தொடா்பு கொள்ளலாம். பேரிடா் தொடா்பான தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.