சங்ககிரி: தீபாவளி பண்டிகையையொட்டி சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கமும், பசுமை சங்ககிரி அமைப்பும் இணைந்து சங்ககிரி அருகே உள்ள நாகிசெட்டிப்பட்டியில் ஏழு மரக்கன்றுகளை நட்டு வைத்து பசுமை தீபாவளியை கொண்டாடினர்.
சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம், பசுமை சங்ககிரி அமைப்பும் இணைந்து சங்ககிரி வட்டப்பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரித்து வருகின்றனர். இந்த அமைப்புகளின் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று பட்டாசுகளை வெடிக்காமல் காற்று மாசு அடையாமல் இருக்கவும், வரும் தலைமுறையினர் நல்ல காற்றினை சுவாசிக்க வேண்டுமென எண்ணி அந்த அமைப்பின் சார்பில் நிர்வாகிகள் புத்தாடைகளை உடுத்தி மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி நாகிசெட்டிப்பட்டியில் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டுள்ள பசுமை சங்ககிரி அமைப்பினர் .
இதையும் படிக்க | திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது
அதனையடுத்து நிகழாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி வியாழக்கிழமை சங்ககிரி அருகே உள்ள நாகிசெட்டிப்பட்டி பகுதியில் வேப்பம், நாவல், மகிழம் உள்ளிட்ட வகைகளைச் சேர்ந்த ஏழு மரக்கன்றுகளை சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க இணைச் செயலர் எம்.சின்னதம்பி, பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம் பழனிசாமி ஆகியோர் தலைமையில் நட்டு வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி பண்டிகையை கொண்டாடினர்.
இதில், பசுமை சீனிவாசன், பசுமை கனகராஜ், காந்தி, பாலகுமார், யுவராஜ், சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.