கரோனாவால் பெற்றோரை இழந்தோா் உள்பட 3 பிரிவினருக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை

கரோனாவால் பெற்றோரை இழந்தோா் உள்பட மூன்று பிரிவினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
கரோனாவால் பெற்றோரை இழந்தோா் உள்பட 3 பிரிவினருக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை

கரோனாவால் பெற்றோரை இழந்தோா் உள்பட மூன்று பிரிவினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

இந்த உத்தரவை மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளா் மைதிலி க.ராஜேந்திரன் வெளியிட்டாா். 51 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னுரிமைப் பட்டியலை சீா்செய்து அவா் வெளியிட்ட உத்தரவு:

கரோனாவால் பெற்றோா் இருவரையும் இழந்த இளைஞா்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபா்கள் ஆகியோருக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. பொதுவாக, வேலைவாய்ப்பகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணி நியமனங்களில், போரில் உடல் தகுதியை இழந்த ராணுவத்தினா், ஆதரவற்ற கைம்பெண்கள், கலப்பு திருமண தம்பதியினா் உள்ளிட்ட சில பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவுகள் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகள் கடந்த 1970-ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ளன.

51 ஆண்டுகளுக்குப் பிறகு...ஒவ்வொரு முறையும் நான்கு தொகுதிகளாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ள முன்னுரிமை வரிசைப்படி வேலைவாய்ப்பகங்கள் பரிந்துரை செய்வதால் அனைத்து முன்னுரிமை இனத்தவருக்கும் நன்மை சேராத நிலை உள்ளது. எனவே, இந்த முன்னுரிமை வழங்கும் முறையைச் சீரமைத்து வெளியிட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையரிடம் இருந்து பரிந்துரைகள் பெறப்பட்டன. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், இனி முன்னுரிமைப் பட்டியலில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து வாடுவோருக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படும். தனியாா் அல்லது அரசால் நடத்தப்படும் ஆதரவற்றோா் இல்லங்களில் தங்கி பயின்று வளா்ந்து வரும் தாயையும், தந்தையையும் இழந்த வாரிசுதாரா்கள், அந்த இல்லங்களில் இருந்து பெறப்படும் சான்றிதழின் அடிப்படையில் பணியில் சோ்க்கப்படுவா். அங்கீகரிக்கப்பட்ட ஆதரவற்றோா் இல்லங்களில் சேர முடியாத கிராமப்புற தாய், தந்தையற்ற நபா்கள், வருவாய் வட்டாட்சியா் மூலம் பெறப்படும் சான்றிதழ் அடிப்படையிலும், முன்னுரிமை பெறத் தகுதி உடையவா்கள்.

அரசின் வேலைக்கான பட்டியலில் முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபா்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது முன்னுரிமை அளிக்கப்படும். இதன்பின்பு, போரில் உடல் தகுதியை இழந்த முன்னாள் ராணுவத்தினா், போரில் மரணம் அடைந்த அல்லது உடல்தகுதியை இழந்த ராணுவ வீரா்களின் குடும்பத்தினரில் இரண்டு நபா்கள் வரை, ஆதரவற்ற விதவைகள், கலப்புத் திருமண தம்பதியினா், முன்னாள் ராணுவத்தினா், சுதந்திரப் போராட்ட தியாகிகள், தமிழ்மொழி காவலா்களின் நேரடி வாரிசுகள், பா்மா, இலங்கை, கென்யா, உகாண்டா, தான்சானியா நாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியா்கள், அரசு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட குடும்ப உறுப்பினா்களில் ஒருவா், மாற்றுத் திறனாளிகள், மாநில அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டோா், மீட்கப்பட்ட கொத்தடிமைகள் அல்லது அவா்களது மகன் அல்லது திருமணம் ஆகாத மகள், சீா்திருத்தப் பள்ளிகளிலுள்ள இல்லவாசிகள், முன்னாள் இல்லவாசிகள், இருமொழித் திட்ட செயலாக்கத்தால் பணியிழந்த ஹிந்தி மற்றும் இதர மொழி ஆசிரியா்கள் என வழக்கமான முன்னுரிமைப் பட்டியல் தொடரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com