உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் 101-வது பிறந்த நாள் விழாவினையொட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள கவிஞர் சுரதாவின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருணாநிதி, வேலு, பிரபாகர ராஜா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் மகேசன் காசிராஜன் . இ.ஆ.ப., மற்றும் குடும்பத்தினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
கவிஞர் சுரதா
கவிஞர் சுரதா, தஞ்சை மாவட்டத்துப் பழையனூரில், திருவேங்கடம்-சண்பகம் தம்பதிக்கு 1921-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி பிறந்தார். இயற்பெயர் இராசகோபாலன்.
பாரதிதாசன் மீது கொண்ட பற்று காரணமாக பாரதிதாசனின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதைக் கொண்டு தன் பெயரை "சுப்புரத்தினதாசன்' என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார்.
கடிதம் எழுதிக் கையெழுத்திடும்போது இட வசதிக்காக "சு ர தா' என்று இடம்விட்டு எழுதுவார். அந்த மூன்று எழுத்துகளே "சுரதா' ஆனது. இவரது கவி புலமையைக் கண்டு இவருக்கு 'உவமைக்கவிஞர்' பட்டம் வழங்கப்பட்டது.
20-க்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரை நூல்களும் 100-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களும், நான்கு திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.
இவர் தன்னுடைய 84-ஆம் வயதில் 2006 ஜூன் 20 அன்று சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.
இதையும் படிக்க | 'உவமைக் கவிஞர்' சுரதா