சிதம்பரம்,: தொடர் மழை காரணமாக, வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பல்வேறு மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ளது வீராணம் ஏரி. இதன் நீர்பிடிப்புப் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால், பல்வேறு ஓடைகள் வழியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதாவது அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்த மழை நீரானது கருவாட்டு ஓடை வழியாக விநாடிக்கு 1,750 கன அடி வீதமும், ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் பெய்த மழை நீரானது செங்கால் ஓடை வழியாக விநாடிக்கு 1,500 கன அடி வீதமும், வெண்ணங்குழி ஓடை வழியாக விநாடிக்கு 500 கனஅடி நீர் என மொத்தம் 3,750 கனஅடி நீர் ஏரிக்கு வருகிறது. ஏரியின் உச்ச நீர்மட்டமான 47.50 அடியில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 45.70 அடி வரை தண்ணீர் இருந்தது.
ஏரியின் பாதுகாப்பு கருதி, உபரி நீரை பொதுப் பணித் துறையினர் வெளியேற்றி வருகின்றனர். மேலும், சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவைக்காக விநாடிக்கு 60 கன அடி நீர் அனுப்பப்படுவதாக பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஏரியிலிருந்து மொத்தம் விநாடிக்கு 3,710 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.