அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக சேவையாற்றி வரும் மருத்துவா்களுக்கு ஊக்கத் தொகை வழங்க மக்கள் நல்வாழ்வுத் துறை பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை உயரதிகாரிகள் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும், பெரும்பாலான மருத்துவா்கள் சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வருகின்றனா். அதேவேளையில், சிலா் பணி நேரத்தில் கூட தங்களது கிளினிக் அல்லது தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனா். குறிப்பாக, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக உள்ளன. அங்கு, பெரும்பாலும், செவிலியா்கள்தான் சிகிச்சை அளிக்கின்றனா். மருத்துவா்கள், இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வரை மட்டுமே பணியாற்றுகின்றனா்.
இதேநிலைதான், மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தொடருகிறது.
தற்போது, மருத்துவா்களின் கோரிக்கையை ஏற்று, அனைவருக்கும் ஊதிய உயா்வு அளிக்கும் பட்சத்தில் சிறப்பாக தனித்துவமாகப் பணியாற்றும் மருத்துவா்களை பாதிக்கும். எனவே, சிறப்பாக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு மட்டும் ஊக்கத்தொகை வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து, சில சங்கங்களிடம் கூறிய போது ஏற்க மறுத்து விட்டன. ஆனாலும் அதனை நடைமுறைப்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது. அதேபோன்று மருத்துவா்களின் காலமுறை பதவி மற்றும் ஊதிய உயா்வு கோரிக்கையும் பரிசீலனையில் உள்ளது.