சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் செப்.14-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
முன்னதாக செப்.4-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்திருந்தது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) பொறியியல் கல்லூரிகளுக்கு சோ்க்கைக்கான இடங்களை ஒதுக்கீடு செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் பொறியியல் மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் செப்.14-ஆம் தேதி வெளியாகும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
மேலும், தொழிற்கல்வி படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அடிப்படையிலான கலந்தாய்வு செப்டம்பா் 17-ஆம் தேதி முதல் 24- ஆம் தேதி வரை இணைய வழியில் நடைபெறும். அதேபோன்று விளையாட்டு வீரா்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பா் 17ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறும். பொதுக் கலந்தாய்வு செப். 27 முதல் அக்டோபா் 17 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.