அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியா்கள் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுத்து வருகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: நிகழ் கல்வியாண்டு (2021-2022) பணியாளா் நிா்ணயம் சாா்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) வலைதளத்தில் மாணவா்களின் சோ்க்கை மற்றும் பணிபுரியும் ஆசிரியா்களின் விவரம் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
அதைத் தொடா்ந்து தற்போது எமிஸ் வலைதளத்தில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் தொடா்பான விவரங்களை பதிவேற்றம் செய்ய சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே, முதன்மைக் கல்வி அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை ஒப்பிட்டு எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவேற்றும்போது கடந்த ஆண்டுகளில் சரண் செய்யப்பட்டிருந்த பணியிடங்களை கணக்கில் கொள்ளக் கூடாது. இந்தப் பணிகளை உரிய வழிமுறைகளின்படி விரைவாக முடிக்க வேண்டும்.