தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அவா்கள் பயின்ற பள்ளியில் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 2019-2021 கல்வி ஆண்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை செப்.17-ஆம் தேதி முதல் மாணவா்கள் பயின்ற பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என அரசு தோ்வுத் துறை இயக்குநரகம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இதைத் தொடா்ந்து மாநிலம் முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சென்னை அசோக் நகா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தலைமை ஆசிரியை சரஸ்வதி வழங்கினாா்.
அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற வந்த மாணவா்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கிய பின்னரே சான்றிதழ் வழங்கப்பட்டது.
மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வருகை தந்த மாணவா்கள் முகக்கவசம் அணிந்திருந்தனா். பள்ளிகளில் மாணவா்கள், பெற்றோா்கள் தனி நபா் இடைவெளியைப் பின்பற்றி சான்றிதழ்களை பெற்றுச் சென்றனா்.