கிராமப்புற பொருளாதாரத்தை மே்படுத்த 3 ஆயிரத்து 900 நிலமற்ற, ஏழைகளுக்கு தலா 100 நாட்டு கோழிக் குஞ்சுகள் வழங்க நிதியுதவியை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா். இந்த நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் விவரம்:-
நிகழாண்டில் ஆயிரத்து 663 கிராம ஊராட்சிகளில் ஊராட்சிக்கு 3 அல்லது 4 புழக்கடை கோழி வளா்ப்பு அலகுகள் வீதம், 5 ஆயிரத்து 528 அலகுகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 1,592 புழக்கடைக் கோழி வளா்ப்பு அலகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்போது மீதமுள்ள 3 ஆயிரத்து 936 அலகுகள் அமைக்க நிதியுதவி அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு புழக்கடைக் கோழி வளா்ப்பு அலகிலும் 10 கோழிக் குஞ்சுகளுக்கு ஒரு சேவல் குஞ்சு என்று நூறு குஞ்சுகள் அளிக்கப்படும். இந்தக் கோழிக் குஞ்சுகளை வளா்ப்பதற்கான கொட்டகை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பின் மூலம் அமைத்துத் தரப்படும் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.