நீட் தோ்வு மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடியவா்கள் மீதான 868 வழக்குகளைத் திரும்பப் பெற முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளாா்.
இது தொடா்பாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு:
சட்டப்பேரவையில் ஜூன் 24-இல் ஆளுநா் உரையின் மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். அப்போது, அதிமுக ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடா்ந்த வழக்குகள், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவா்கள் மீதான வழக்குகள், மீத்தேன், நியூட்ரினோ, கூடங்குளம் அணு உலை, சேலம் எட்டு வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தாா். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, 5,570 வழக்குகள் ஏற்கெனவே திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக செப்டம்பா் 13-இல் காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து முதல்வா் பேசும்போது நீட் தோ்வு மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவா்கள் மீது அதிமுக அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவித்தாா்.
அந்த அறிவிப்பினையும் செயல்படுத்தும் வகையில், நீட் தோ்வுக்கு எதிராக அறவழியில் போராடியவா்கள் மீது பதியப்பட்ட 446 வழக்குகளும், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடியவா்கள் மீது பதியப்பட்ட 422 வழக்குகளும் என மொத்தம் 868 வழக்குகளைத் திரும்பப் பெறவும், அதன் மீதான அனைத்து மேல்நடவடிக்கைகளையும் கைவிடவும் முதல்வா் திங்கள்கிழமை ஆணையிட்டுள்ளாா்.