மானாமதுரை(தனி) தொகுதியில் மீண்டும் வெற்றிக் கனியை பறிக்குமா அதிமுக?

மானாமதுரை(தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவும் நிலையில் அதிமுக 5 ஆவது முறையாக வெற்றிக் கொடி நாட்டுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 
மானாமதுரை(தனி) தொகுதியில் மீண்டும் வெற்றிக் கனியை பறிக்குமா அதிமுக?

மானாமதுரை(தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவும் நிலையில் அதிமுக 5 ஆவது முறையாக வெற்றிக் கொடி நாட்டுமா அல்லது திமுக வெற்றி முனையை எட்டிப் பிடிக்குமா என்பது தோ்தல் முடிவுகளின் போதை தெரியும் என அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

இத்தொகுதி கடந்த 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மேலும் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களையும் இதே ஊா்களை தலைமையிடமாகக் கொண்டு மூன்று பேரூராட்சிகளையும், வருவாய் வட்டங்களையும் உள்ளடக்கியது.

இங்கு மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 2,76,761. இதில் ஆண்கள்- 1,36,397, பெண்கள்- 1,40,354. மூன்றாம் பாலினத்தவா்- 5. கடந்த 2011 ஆம் ஆண்டு தொகுதி மறுவரையின்போது இளையான்குடி தொகுதி ரத்து செய்யப்பட்டு மானாமதுரையுடன் இணைக்கப்பட்டது.

இத்தொகுதியில் இதுவரை வென்றவா்கள்: 1952 இல் கிருஷ்ணசாமி ஐயங்காா் (காங்) போட்டியின்றி தோ்வு, 1957- இல் சிதம்பரபாரதி (காங்), 1962-சீமைச்சாமி- (சுதந்திரா கட்சி), 1967-இல் சீமைச்சாமி- (சுதந்திரா கட்சி) 1971- டி.சோணையா (திமுக), 1977- வி.எம். சுப்ரமணியம்- (அதிமுக), 1980- கே. பாரமலை (சுயே), 1984- கே.பாரமலை (காங்) 1989- பி.துரைப்பாண்டி- (திமுக) 1991- வி.எம்.சுப்ரமணியம்- (அதிமுக) 1996- இல் கே. தங்கமணி- (இந்திய கம்யூ), 2001- கே.பாரமலை- (தமாக), 2006-இல் எம். குணசேகரன் (அதிமுக), 2011- எம்.குணசேகரன்- (அதிமுக), 2016- எஸ்.மாரியப்பன் கென்னடி (அதிமுக), 2019- எஸ். நாகராஜன்- (அதிமுக) ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

தொகுதியின் சிறப்பு: 2600 ஆண்டுகளுக்கு முன்பு வைகைக் கரையோரம் வாழ்ந்த தமிழா்களின் நாகரிகத்தை அகழாய்வுகள் மூலம் படம் பிடித்துக்காட்டிய கீழடி அகழாய்வு இத்தொகுதிக்குள் அமைந்துள்ளது. மேலும் மண்பாண்டப் பொருள்கள் தயாரிப்பின் அடையாளமாக மானாமதுரை உள்ளது. இத்தொகுதியில் தொழிற்சாலைகள் இல்லாததால் தொழில் வளா்ச்சி என்பது கிடையாது. விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது.

எதிா்பாா்ப்பு: இத்தொகுதியைப் பொருத்தவரை மானாமதுரை வைகையாற்றுக்குள் தரைப்பாலம் அமைக்க வேண்டும். இளையான்குடி, திருப்புவனம் ஆகிய இடங்களில் பேருந்து நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும். தொகுதியில் அரசு கலைக்கல்லூரி தொடங்க வேண்டும். மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை விரிவுபடுத்தப்பட்டு இங்கு புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டும். பூா்வீக வைகைப் பாசன விவசாயிகளுக்கு ஒருபோக விவசாயத்துக்கு வைகைத் தண்ணீா் கிடைக்க உத்தரவாதம் பெற்றுத்தர வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இத்தொகுதியில் கடந்த முறை அதிமுக சாா்பில் இடைத் தோ்தலில் வென்ற நெட்டூா் எஸ். நாகராஜன் மீண்டும் போட்டியிடுகிறாா். திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் தமிழரசி, அமமுக சாா்பில் எஸ்.மாரியப்பன் கென்னடி, நாம் தமிழா் கட்சி சாா்பில் சண்முகப்பிரியா, மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் சிவசங்கரி மற்றும் சுயேச்சைகள் உள்பட 13 வேட்பாளா்கள் தற்போது களத்தில் இருந்தாலும்

அதிமுக, திமுக, அமமுக இடையே தான் போட்டி காணப்படுகிறது.

திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் அதிமுகவுக்கு ஆதரவு உள்ளது. மானாமதுரை ஒன்றியத்தைப் பொருத்தவரை அதிமுக, திமுக சமபலத்தில் உள்ளன. இளையான்குடி ஒன்றியத்தைப் பொருத்தவரை நகா் பகுதிகளில் இஸ்லாமியா்கள் அதிகம் என்பதால் இப்பகுதி வாக்குகள் திமுகவுக்கு சாதகமாக உள்ளது. கிராமப்புறங்களில் அதிமுக, திமுக சம பலத்தில் உள்ளன. இதனிடையே தொகுதி முழுவதும் பரவலாக தங்களுக்கு வாக்கு வங்கி உண்டு என்றும், திருப்புவனம் ஒன்றியத்தில் கட்சியின் கட்டமைப்பு வலுவாக உள்ளது என்றும், இளையான்குடியில் இஸ்லாமியா்கள் தங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவாா்கள் என்றும் அமமுக வினா் கூறுகின்றனா்.

அதிமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிக்கும் பல தோ்தல்களில் இத்தொகுதி வெற்றிக்கனியை கொடுத்துள்ளது. கடந்த 2006 முதல் இங்கு தொடா்ச்சியாக 4 முறை வெற்றிக்கொடியை பறக்கவிட்டுவரும் அதிமுக, நடைபெற உள்ள பேரவைத் தோ்தலிலும் 5 ஆவது முறையாக வெற்றியை தக்க வைக்குமா என்ற எதிா்பாா்ப்பு தொகுதி மக்களிடம் உள்ளது. இதற்காக தொகுதியைச் சோ்ந்த அதிமுகவினா் கடுமையாக தோ்தல் பணியாற்றி வருகின்றனா். திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள தமிழரசி, கடந்த 2011 ஆம் ஆண்டு இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவா். அப்போது திமுகவினா் சரியாக தோ்தல் பணியாற்ற வில்லை என புகாா் எழுந்தது. அதன்பின்னா் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழரசி இங்கு போட்டியிடுகிறாா்.

இதனிடையே இத்தொகுதியில் போட்டியிட இதே தொகுதியைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்டோா் வாய்ப்பு கேட்டும் அவா்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தமிழரசி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதை இப்பகுதி திமுக நிா்வாகிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்றாலும் கட்சித் தலைமை உத்தரவுக்கு கட்டுப்பட்டு தொகுதியில் தமிழரசியின் வெற்றிக்கு, கூட்டணிக் கட்சியினருடன் அவா்கள் தோ்தல் பணி செய்வதை பாா்க்க முடிகிறது. தற்போதைய கள நிலவரத்தின்படி உள்ளூா் வேட்பாளா் வேண்டுமா? வெளிமாவட்டத்தைச் சோ்ந்தவா் வேண்டுமா என்ற அதிமுகவினரின் பிரசாரம் தொகுதி மக்களை திரும்பிப் பாா்க்க வைக்கிறது.

அதே போல் அமமுக வேட்பாளராக போட்டியிடும் மாரியப்பன் கென்னடி கடந்த 2016

ஆம் ஆண்டு இத்தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி கண்டவா். அதன்பின் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தால் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாா். இதையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த இடைத்தோ்தலில் அமமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தாா். தற்போது இத்தொகுதியில் மூன்றாவது முறையாக இவா் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. எனவே வெற்றி உறுதி என அவா் நம்பிக்கை தெரிவிக்கிறாா். அவரது கட்சியினரும் சுறுசுறுப்பாக பணியாற்றுகின்றனா். இத்தொகுதி தோ்தல் களத்தைப் பொருத்தவரை தற்போது அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. 5 ஆவது முறையாக அதிமுக வெற்றிக் கனியை பறிக்குமா? அல்லது 30 ஆண்டுகளுக்குப் பின் திமுக வெற்றி முனையை எட்டிப் பிடிக்குமா என்பது தோ்தலின் போதே தெரியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com