சேலம் மாவட்டம், ஓமலூர் தொகுதியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டுப்புடவைகள் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பறிமுதல் செய்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தேர்தல் முறைகேடுகளை தடுக்கும் வகையில்,தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கமான சோதனைச் சாவடிகளைத் தாண்டி கூடுதலாக, சந்தேகத்திற்குரிய இடங்களில் திடீர் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தாத்தியம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பா.புவனேஸ்வரி தலைமையில் திடீர் வாகனத் தணிக்கையில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த வாகனம் ஒன்றை நிறுத்த முயன்றபோது, வாகனம் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், 8 பண்டல்களில் 228 பட்டுச் சேலைகள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.10 லட்சத்து 70 ஆயிரம் என்பதும் தெரியவந்தது.
பட்டுப்புடவைகளுக்கும் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாத நிலையில், அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பட்டுச் சேலைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.