வேலூர்: வருமான வரித்துறை சோதனை எனும் பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட மாட்டோம் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு, அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் வீடு, ஸ்டாலின் மருமகனின் நண்பர் ஜி ஸ்கொயர் பாலாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு திமுக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, திருவண்ணாமலையில் எ.வ.வேலு வீட்டில் நடந்த சோதனை தொடர்பான பேச்சு அடங்குவதற்குள் திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது.
இந்த சோதனைகளால் திமுகவை அச்சுறுத்த முடியும் என மத்திய அரசு எண்ணினால் அது தவறான கணக்கு. திமுக வருமான வரித்துறை சோதனைகளுக்கும் கைதுகளுக்கும் தண்டனைகளுக்கும் அஞ்சாது.
இந்த வருமான வரித்து சோதனைகள் அரசியல் உள்நோக்கத்தோடு நடைபெறுவதாகவே நான் கருதுகிறேன்.
தேர்தல் நேரத்தில் இப்படிப்பட்ட சோதனைகளை நடத்தினால் ஸ்டாலினோ அல்லது அவரைச் சார்ந்த குடும்பமோ, கட்சியோ அதிர்ச்சி அடைந்துவிடுவார்கள். தேர்தலில் தளர்ச்சி அடைந்து விடுவோர்கள் என்ற தவறான கணக்கை மத்திய அரசு போட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.
இத்தகைய பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படும் கட்சியல்ல திமுக. வருமான வரி சோதனை போன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுவது ஜனநாயகமே அல்ல.அதே வேளையில் அதிமுக கூட்டணியைச் சேர்ந்தவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்படுவது கண் துடைப்பானது. அதாவது கண்துடைப்புக்காகவே அதிமுகவினரின் இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.
இதுபோன்ற வருமான வரித்துறை சோதனைகள், தேர்தலில் பாஜக கூட்டணியின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு என்றும் துரை முருகன் கூறியுள்ளார்.
ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் விருது வழங்கப்பட்டது பொருத்தமானது தான். அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன் என்றார்.