தேனி: தேனி மாவட்டம், போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் அருகே அதிமுக மாவட்ட நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
போடியில், துணை முதல்வர் வீடு அருகே வசிப்பவர் அதிமுகவைச் சேர்ந்த தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளராக செயல்பட்டு வருகிறார் குறிஞ்சி மணி. இவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்ததையடுத்து மதுரை வருமான வரித்துறை உதவி ஆணையர் பூவலிங்கம் தலைமையில் வருவான வரித்துறையினர் குறிஞ்சி மணி வீட்டிற்கு வந்தனர்.
அங்கு அவரது வீட்டில் வருமான வரித்துறையின் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறையினருடன் தேர்தல் பறக்கும்படையினரும் அப்பகுதியில் கண்காணித்து வருகின்றனர்.
குறிஞ்சி மணி ஏற்கனவே தேமுதிக ஒன்றிய செயலாளராக இருந்தவர். தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக.ல் சேர்ந்தார். இதனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடு அமைந்துள்ள பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் வருமான வரித்துறையினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.