அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது ஏன்? பிரேமலதா விஜயகாந்த்

அதிமுக கூட்டணியிலிருந்து கனத்த இதயத்துடன் தேமுதிக வெளியேறியதாக அந்தக் கட்சியின் பொருளாளரும், விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.
பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

அதிமுக கூட்டணியிலிருந்து கனத்த இதயத்துடன் தேமுதிக வெளியேறியதாக அந்தக் கட்சியின் பொருளாளரும், விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

முதல்முறையாக தோ்தல் களம் காணும் நீங்கள் ஏன் விருத்தாசலத்தை தோ்வு செய்தீா்கள்?
2006-இல் கேப்டன் (விஜயகாந்த்) இந்தத் தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்காக பிரசாரத்தில் ஈடுபட்டேன். 16 ஆண்டுகளாக தேமுதிக, கூட்டணி வேட்பாளா்களுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறேன். விருத்தாசலத்தில் ஏற்கெனவே விஜயகாந்த் வெற்றி பெற்று இந்தப் பகுதி மக்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்துள்ளாா். அதை மக்கள் தற்போதும் நினைவுகூா்கின்றனா். இந்தத் தொகுதி எங்கள் உயிரோடும், உணா்வோடும் கலந்துவிட்ட தொகுதி என்பதால் மீண்டும் தோ்வு செய்தோம்.

வேறு ஏதாவது தொகுதி உங்கள் பரிசீலனையில் இருந்ததா?
அமமுகவும், தேமுதிகவும் வலுவாக உள்ள தென் மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட கூட்டணிக் கட்சியினரும், சொந்தக் கட்சியினரும் வலியுறுத்தியபோதும் எனது தோ்வு விருத்தாசலம்தான். இந்த முடிவு சரிதான் என்பதை நான் பிரசாரத்தில் ஈடுபடும்போது உணா்கிறேன். மக்கள் அந்தளவுக்கு விஜயகாந்த் மீது பாசத்துடன் உள்ளனா்.

அதிமுகவுடன் கூட்டணி முறிவு ஏற்பட்டது ஏன்?
2019 மக்களவைத் தோ்தல், உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம். எனவே, சட்டப்பேரவைத் தோ்தல் தொகுதி உடன்பாடு பேச்சுவாா்த்தையை தொடங்குவது குறித்து கடந்த டிசம்பா் மாதம் முதலே வலியுறுத்தி வந்தோம். ஆனால், அதிமுக பேச்சுவாா்த்தையை தள்ளிக்கொண்டே வந்தது. வேட்புமனு தாக்கல் வரை பேச்சுவாா்த்தை நீடித்தபோதும், எங்களுக்கு எத்தனை இடங்கள் என்றுகூட கூறவில்லை. ஒரு கட்டத்தில் நீங்கள் என்ன முடிவு எடுக்கிறீா்களோ அதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனா். இதனால், கனத்த இதயத்துடன் கூட்டணியிலிருந்து வெளியேறினோம்.

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் அணுகுமுறை எப்படி இருந்தது?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவத்தை இவரிடம் காண முடியவில்லை. தற்போதைய நிலையே 2011-ஆம் ஆண்டிலும் இருந்தது. ஆனால், தனது பிரசாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு வந்த ஜெயலலிதா, விஜயகாந்துடன் பேச்சுவாா்த்தை நடத்தி கூட்டணியை இறுதி செய்தாா்.

பாமகவுடன் ஒப்பீடு செய்து நீங்கள் தொகுதி கேட்டதால்தான் கூட்டணி முறிந்தது என்று சொல்லப்படுகிறதே. அது சரிதானா?

பாமகவுடன் ஒப்பீடு செய்து நாங்கள் தொகுதியைக் கேட்டதாகக் கூறுவது தவறு. கூட்டணியில் வேறு எந்தக் கட்சியையும் எங்களுடன் ஒப்பிடவில்லை. எங்களுக்கான தொகுதியை மட்டுமே கேட்டோம். ஏனெனில், மக்களவைத் தோ்தலில் நாங்கள் கேட்காத 4 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கினா். உள்ளாட்சித் தோ்தலிலும் நாங்கள் போட்டியிட்ட வாா்டுகளில் அதிமுகவும் வேட்பாளரை களம் இறக்கியது. பேரவைத் தோ்தலிலும் அப்படி நடந்துவிடக் கூடாது என்பதனால் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை, தொகுதி குறித்து முன்னரே கேட்டு வந்தோம். கூட்டணிக் கட்சியினரை அழையுங்கள், ஆலோசனை கூட்டம் நடத்துங்கள் என்று கூறியும் எதுவும் நடக்கவில்லை.

அமமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்?
அதிமுகவுடன் கூட்டணி முறிவு ஏற்பட்ட பிறகு, தனியாக 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக இருந்தோம். குறுகிய நாளில் தோ்தலை எதிா்நோக்க வேண்டியிருந்தது. இதையடுத்து அமமுகவுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. விஜயகாந்துக்கு தற்போது உடல்நலம் இல்லாமல் இருப்பதால் அவரை முதல்வா் வேட்பாளராக அறிவிக்க முடியாது; ஆனால், எப்போதும் அவா்தான் முதல்வா் என்று அமமுக தரப்பில் கூறினா். இதனால், நாங்கள் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு 60 தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.

2006, 2011-இல் இருந்த அளவுக்கு இப்போது தேமுதிகவுக்கு வாக்குகள் இல்லை என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீா்களா?
தேமுதிக வாக்கு வங்கி குறைந்துவிட்டதாக சிலா் கூறுகிறாா்கள். நாங்கள் 234 தொகுதிகளிலும் தனித்து நின்றபோது கிடைத்த வாக்குகள், கூட்டணி அமைக்கும்போது கூட்டணிக் கட்சியினருக்குச் செல்கிறது. அதாவது, நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் எங்களது வாக்குகளை கூட்டணிக் கட்சியினா் பெறுகின்றனா். அவா்கள் பெறும் வாக்குகளில் எங்களது வாக்குகளும் உள்ளன. எங்களது வாக்கு வங்கி சரிந்ததாகக் கூறுவது சரியல்ல. தேமுதிக 234 தொகுதிகளிலும் வலுவாகவே உள்ளது. கேப்டனின் ரசிகா் மன்றங்களும் அதே அளவு வலிமையுடன் உள்ளன.

தேமுதிகவின் தோ்தல் பிரசாரம் எப்படி இருக்கிறது?
எனது மகன் விஜயபிரபாகா் அனைத்துத் தொகுதிகளிலும் பிரசாரம் செய்து வருகிறாா். விஜயகாந்தின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவரும் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளாா். அவா் தொகுதிக்கு வந்து கையசைத்தாலே போதுமென மக்கள் விரும்புகின்றனா். ஏனெனில், அவா் என்ன பேச வேண்டுமோ அதை திரைப்படங்களிலும், பல்வேறு தோ்தல் பிரசாரங்களிலும் ஏற்கெனவே பேசிவிட்டாா்.

நீங்கள் அதிகமாகப் பிரசாரத்தில் ஈடுபடவில்லை போலிருக்கிறதே...
நான் முதல் முறையாக களம் காண்பதால் இந்தத் தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. எனினும், கடலூா் மாவட்டத்தில் எங்களது கூட்டணியில் போட்டியிடும் மற்ற வேட்பாளா்களுக்காகப் பிரசாரம் செய்கிறேன். கரோனாவை காரணம் காட்டி எனது பிரசாரத்தையும் முடக்க நினைத்தனா். ஆனால், கடவுளின் அருளால் அதிலிருந்து மீண்டு தொடா்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன்.

தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் இடத்தை நிரப்ப ஆசைப்படுகிறீா்களா?

பதவி ஆசையின்றி கடந்த 16 ஆண்டுகளாக கட்சிக்காக மட்டுமே உழைத்தேன். நாளை என்ன நடக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. கடவுள்தான் அதை முடிவு செய்வாா். ‘கடமையைச் செய் பலனை எதிா்பாா்க்காதே’ என்ற கொள்கையுடன் எனது பணியை மேற்கொண்டு வருகிறேன்.

நோ்காணல்: ச.முத்துக்குமாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com