கம்பம்: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதிக்கு உள்பட்ட குள்ளப்பகவுண்டன்பட்டியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு வைத்திருந்த ரூ. 8,71,500 பறிமுதல் செய்த பறக்கும் படையினர் திமுக வேட்பாளர் ஆ.மகாராஜன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதிக்குள்பட்ட குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி பிள்ளையார் கோவில் பகுதியில் சிலர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படை - 2 க்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பறக்கும் படை தேர்தல் பிரிவு அதிகாரிகள் வருவதை அறிந்தவர்கள் பணத்தை சாலையில் வீசி விட்டு தப்பி சென்றனர், அப்போது, அலுவலர்கள் சாலையில் கிடந்த பணம் ரூ. 8 லட்சத்து 71 ஆயிரத்தை கைப்பற்றி உத்மபாளையம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக கூடலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜேம்ஸ்ஜெயராஜ், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக ஆண்டிபட்டி திமுக வேட்பாளர் ஆ.மகாராஜன், கிளைச்செயலாளர் குணசேகரன், நிர்வாகி மனோகரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.