கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சிக்குள்பட்ட லெட்சுமாங்குடி- திருவாரூர் பிரதான சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள வாய்க்காலை சரி செய்து தருபவருக்கே வாக்களிப்போம் என பொதுமக்கள், வாகன ஒட்டிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார்குடி - திருவாரூர் பிரதான சாலை, லெட்சுமாங்குடி ஏ ஆர்.சாலை எதிரே, வெண்ணாற்றிலிருந்து, லெட்சுமாங்குடி பாலம் அருகே பிரிந்து வரக்கூடிய, பாசன வாய்க்கால் பிரதான சாலையை ஒட்டினார் போல் சென்று கொண்டிருக்கிறது.
இந்தப் பிரதான சாலையில்தான், திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, காரைக்கால், பாண்டிச்சேரி மற்றும் மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, கும்பகோணம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லக கூடிய நூற்றுக்கணக்கான பேருந்துகளும், ஆயிரக் கணக்கான வாகனங்களும் இச்சாலை வழியாகத்தான் தினமும் சென்று வருகிறது. மேலும், பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளுக்கும் இந்த பிரதான சாலையைத்தான் மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
பிரதான சாலையில் செல்லக் கூடிய இந்த பாசன வாய்க்கால், பல ஆண்டுகளாக மூடப்டாமல் திறந்த நிலையில், பெரும் ஆபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வகையில் உள்ளன.
மேலும், வர்த்தக நிறுவனங்கள் அதிகம் நிறைந்த இப்பகுதியில், கடைகளின் முன்பாகவே திறந்த நிலையில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலும், சாக்கடைக் கழிவுகளுடன் தொற்று நோய் பரவும் நிலையில் ஆபத்தை எதிர்நோக்கி பெரும் பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் நிலை தடுமாறி விழுந்து படுகாயம் அடைகிறார்கள்.
இந்தப் பாசன வாய்க்காலை தூர்வாரி, இரு பக்கமும் மதில் சுவர்கள் எழுப்பி, வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பாதுக்காப்பை ஏற்படுத்தி தருபவருக்கே வாக்களிப்போம் என சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.