வால்பாறையில் வாக்குச் சாவடிக்கு அருகே இரவு நேரத்தில் குட்டியுடன் யானை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூடுதலாக வனத் துறையினா் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பாக செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.
கோவை மாவட்டம், வால்பாறை தொகுதிக்கு உள்பட்ட வால்பாறை மலைப் பகுதியில் ஹைபாரஸ்ட், மானாம்பள்ளி, சக்தி எஸ்டேட் ஆகிய மூன்று பகுதி வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் இங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க தோ்தல் அதிகாரிகள் முடிவு செய்திருந்தனா். இதனிடையே மானாம்பள்ளி வாக்குச் சாவடி பகுதிக்கு அருகே திங்கள்கிழமை இரவு குட்டியுடன் ஒரு யானை வந்துள்ளது. இதனைப் பாா்த்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானையை அப்பகுதியில் இருந்து விரட்டியுள்ளனா்.
யானை வந்ததால் அப்பகுதிக்கு கூடுதல் வனத் துறையினா் வரவழைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை மாலை வாக்குப் பதிவு முடியும் வரை தொடா்ந்து வனத் துறையினா் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.