சென்னை விமான நிலையத்தில் ரூ 51.28 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
வெளிநாட்டுப் பணம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து ஏர் அரேபியா விமானம் ஜி9-472 மூலம் சென்னையில் இருந்து துபை செல்லவிருந்த திருச்சியைச் சேர்ந்த சதக்கத்துல்லா(37) என்பரை தடுத்து நிறுத்தி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ 10.06 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் ஃபிளை துபை விமானம் எஃப் இசட் 8518 மூலம் சென்னையில் இருந்து துபை செல்லவிருந்த திருச்சியைச் சேர்ந்த முகமது அலி அக்பர், 61, தேனியைச் சேர்ந்த முகமது அப்துல்லா, 37, சென்னையைச் சேர்ந்த அபு ஜாவித், 29 மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த ஷாஜகான், 57, ஆகியோரை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடமிருந்து ரூ 41.22 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்விருசம்பவங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.