சிதம்பரம்: பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரிடம் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரம் ஆரணியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரபிரபு (36) இவர் பகுஜன் சமாஜ் கட்சி சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியின் வேட்பாளராகவும், அக்கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.
புதன்கிழமை இரவு தேர்தல் பணிகளை முடித்து விட்டு சந்திரபிரபு சிதம்பரம் புறவழி சாலையில் இந்தியன் கேஸ் குடோன் வழியாக தனது வீட்டிற்கு செல்லும்போது அந்த வழியாக வந்த நபர் சந்திரபிரபுவை வழிமறித்து நிறுத்தி அவர் சட்டைப்பையில் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து சந்திரபிரபு சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையின் அடிப்படையில் சிதம்பரம் சகஜானந்தா தெருவைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பது தெரியவந்தது.
இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.