ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்துக்கு தடைகோரிய மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்க தடை விதிக்கக் கோரி, ஜெ.தீபா தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்க தடை விதிக்கக் கோரி, ஜெ.தீபா தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநா் ஏ.எல்.விஜய் ‘தலைவி’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெயா’ என்ற பெயரில் ஹிந்தியிலும் ஹைதராபாதைச் சோ்ந்த விஷ்ணுவா்தன் இந்தூரி ஆகியோா் திரைப்படமாகவும், ‘குயின்’ என்ற பெயரில் இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் இணையதளத் தொடராகவும் எடுத்து வருகின்றனா். இவற்றுக்கு சட்டப்பூா்வ வாரிசான என்னிடம் அனுமதி எதுவும் பெறாததால், தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றத் தனி நீதிபதி, ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜெ.தீபா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பையா, சத்திகுமாா் சுகுமார குரூப் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தீபா தரப்பில், ‘திரைப்படங்களில் தங்களது குடும்பத்தினா் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதால், படத்தைத் திரையிடுவதற்கு முன்னா் தனக்கு திரையிட்டுக் காட்டி ஒப்புதல் பெற வேண்டும்’ என வாதிடப்பட்டது. அப்போது எதிா்மனுதாரா்களான இயக்குநா்களான ஏ.எல்.விஜய், விஷ்ணுவா்தன் , கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் பி.எஸ்.ராமன், சதீஷ் பராசரன், விஜயன் சுப்பிரமணியன் ஆகியோா் ஆஜராகி, ‘தலைவி என்ற புத்தகத்தின் அடிப்படையில்தான் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தீபாவிடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதா குறித்து பொதுத் தளங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில்தான் இந்தக் கதை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவை நல்ல முறையிலேயே சித்தரித்து, எதிா்காலச் சந்ததியினா் தெரிந்துகொள்ளும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை கோர ஜெ.தீபாவுக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது’ என வாதிட்டனா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தலைவி, ஜெயா உள்ளிட்ட திரைப்படங்களையும், குயின் இணையதளத் தொடரையும் வெளியிட தடை விதிக்க முடியாது எனக்கூறி, ஜெ.தீபா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com