வணிக வளாகங்களில் சட்டவிரோத கடைகள்: பொதுநல வழக்குத் தொடா்ந்தவருக்கு ரூ.100 அபராதம்
பொது பயன்பாட்டுக்கான இடங்களில் கடைகள் வைக்க அனுமதிக்கும் உரிமங்களை ரத்து செய்யக் கோரி பொது நல வழக்குத் தொடா்ந்தவருக்கு ரூ.100 அபராதம் விதித்து உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் வாராகி என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகம் முழுவதும் உள்ள வணிக வளாகங்களில் பொதுப் பயன்பாட்டுக்காக இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த பொதுப் பயன்பாட்டு இடங்களை சட்டவிரோதமாக வாடகைக்கு விடுகின்றனா். இதில் கடைகள் அமைக்கப்படுவதால், பொதுமக்களின் நடமாட்டத்துக்கு இடையூறு, அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே வணிக வளாகத்துக்குள் இருக்கும் பொதுப் பயன்பாட்டு இடங்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும். பொதுப் பயன்பாட்டு இடங்களை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டும் வணிக வளாகங்களின் உரிமங்களை ரத்து செய்வதுடன், கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியாா் சொத்துகள் குறித்து பொதுநல வழக்குத் தொடர முடியாது. இதற்காக பொதுநல வழக்குகள் தாக்கல் செய்வதை அனுமதிக்க முடியாது. எனவே மனுதாரருக்கு ரூ.100 வழக்குச் செலவு (அபராதம்) விதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். மேலும் உயா் நீதிமன்ற அனுமதியின்றி மனுதாரா் பொதுநல வழக்குத் தொடர ஓராண்டு தடை விதித்து உத்தரவிட்டனா். வணிக வளாகங்கள் கட்டடத் திட்ட அனுமதியை மீறியது குறித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் மனுதாரா் புகாா் அளிக்கலாம் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.