மே மாதம் மத்தியில் கரோனா உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இன்று கிண்டியில் கரோனா பரிசோதனை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், 'கரோனா தொற்று ஏற்பட்டு தீவிரமாக அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லுங்கள்.
அறிகுறிகள் இன்றி கரோனா தொற்று ஏற்பட்டாலோ அல்லது கரோனாவுக்கான லேசான அறிகுறிகள் இருந்தாலோ உங்கள் வார்டு சுகாதார ஆய்வாளரை தொடர்பு கொண்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். வீட்டில்தனிமைப்படுத்திக்கொள்ள முடியாதவர்கள் கரோனா கண்காணிப்பு மையங்களுக்குச் செல்லுங்கள். அங்கு உங்களுக்கு அனைத்துவிதமான பரிசோதனையும் எடுக்கப்படும்.
லேசான அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறே தொற்றின் தன்மையைப் பொருத்து நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறார்கள் .
நேற்று சென்னையில் 3,600 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 1700 பேர் கரோனா கண்காணிப்பு மற்றும் சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மருத்துவமனைகளுக்கோ அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோ உள்ளனர்.
மே மாதம் மத்தியில் கரோனா உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
சென்னையில் 4 நாள்கள் முகக்கவசம் அணிந்தால் கரோனா பரவல் குறைந்துவிடும் என்றார்.