மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஸ்ரீ வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திருவிழா தொடக்கமாக சுந்தரராஜப் பெருமாள் சன்னதி மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதமாய் அலங்காரத்துடன் எழுந்தருளிய உற்சவர் வீர அழகருக்கு காலை 7 மணிக்கு கையில் காப்பு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
மூலவர் சுந்தரராஜப் பெருமாள் வெள்ளிக் கவசம் அலங்காரத்தில் எழுந்தருளியிருந்தார். திருவிழா தொடக்கத்துக்கான பூஜைகளை அர்ச்சகர் கோபிமாதவன் நடத்தினார். நிகழ்ச்சியில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழா தொடர்ந்து மே 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோயிலுக்கு உள்ளேயே உள்விழாவாக நடத்தப்படும் இந்தத் திருவிழாவில் தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் வீர அழகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதன் பின் கோயிலுக்கு உள்ளேயே சுவாமி புறப்பாடு நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 26 ஆம் தேதி அழகர் எதிர்சேவை உற்சவமும் மறுநாள் 27 ஆம் தேதி ஆற்றில் அழகர் இறங்கும் வைபவமும் கோயிலுக்கு உள்ளேயே நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிக்கப்பட்டுள்ளது. மே 2 ஆம் தேதி தீர்த்த உற்சவத்துடன் இந்தாண்டு வீர அழகர் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா நாட்களில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.