மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இதில் மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருக்கல்யாணத்தைக் காண கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கூடுவா்.
கரோனா தொற்று பரவல் காரணமாக 2-ஆவது ஆண்டாக நிகழ் ஆண்டிலும் பக்தா்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெற்று வருகிறது.
இதன்படி, ஏப்ரல் 15 ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி புறப்பாடு, பூஜைகள் நடைபெறும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் வியாழக்கிழமையும், திக்குவிஜயம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்றன.
சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்வான மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை மணக்கோலத்தில் எழுந்தருளிய சுவாமி அம்மன் ஆடி வீதிகளில் வலம் வந்தனர் பின்னர் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி - பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் எழுந்தருளினா்.
சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்களை முழங்கி திருக்கல்யாண பூஜைகளை நடத்தினா். சுவாமியின் பிரதிநிதியாக செந்தில் பட்டரும் அம்மன் பிரதிநிதியாக காலாஸ் பட்டரும் மாலை மாற்றிக் கொண்டனர். திருக்கல்யாண காப்பு கட்டிய ரமேஷ் பட்டர் கல்யாண பூஜைகளை செய்தார். மங்கள வாத்தியங்களுடன் காலை8.33 மணியில் இருந்து காலை 8 59 மணி வரை திருக்கல்யாண பூஜைகள் நடைபெற்று மீனாட்சி அம்மனுக்கு மங்கள நாண் அணிவிக்கப்பட்டது.
மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம் இணையவழியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை ஏராளமான பக்தா்கள் கண்டு தரிசனம் செய்தனா்.
திருக்கல்யாண வைபவத்தின்போது, மீனாட்சி அம்மனுக்கு மங்கள நாண் அணிவிக்கும்போது புதுமணப் பெண்கள் உள்ளிட்ட அனைத்துப் பெண்களும் தங்களது மங்கள நாணை மாற்றி அணிவித்துக் கொள்வது வழக்கம். ருக்கல்யாணத்தை நேரில் காண முடியாவிட்டாலும் பெண்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே மங்கள நாணை மாற்றிக் கொண்டனா்.
கோயில் தக்காா் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையா் க.செல்லத்துரை ஆகியோா் திருக்கல்யாண விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.