தமிழகத்தில் தற்போது 40 % படுக்கைகள் காலியாக உள்ளதாகவும், மருத்துவர் அறிவுரையின்றி ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி யாரும் போட்டுக் கொள்ளக் கூடாது என்றும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெ. ராதாகிருஷ்ணன், கரோனா தொற்று பாதித்த பொதுமக்கள், மருத்துவமனைகளில், இடம் கிடைக்கவில்லை என்று பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா அறிகுறிகள் இருந்தால் காய்ச்சல் முகாம்களில் சென்று சோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவர்கள் சோதனை செய்து சிகிச்சை வழங்குவார். சிக்கலான தருணங்களில் 108 அல்லது 044-6122300 என்ற எண்ணை அழைக்கலாம். அதுபோல 104 என்ற எண்ணையும் அழைக்கலாம். தேவையில்லாமல் பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம்.
மேலும், சிலர் வீட்டிலேயே ரெம்டெசிவிர் மருந்தை வாங்கிப் போட்டுக் கொள்கிறார்கள். கரோனா பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே ரெம்டெசிவிர் மருந்து வாங்கிப் போட்டுக் கொள்ளக் கூடாது.
சென்னை அண்ணாநகர் புறநகர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி கலன் அமைக்கப்படுகிறது. இந்தக் கலன் ஒரு நிமிடத்துக்கு 150 லிட்டர் ஆக்ஸிஜன் தயாரிக்கும்.
சென்னை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கூடுதலாக 2400 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன என்று தெரிவித்துள்ளார்.