தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2,500 கிலோ விரலி மஞ்சள், 1,500 கிலோ பீடி இலை, வெங்காய விதைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இரு சக்கர வாகனம் மற்றும் படகினை பறிமுதல் செய்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் க்யூ பிரிவு போலீசார் ஈடுப்பட்டனர். அப்போது தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் இரண்டு வாகனங்களில் கொன்டு வந்த பொருள்களை படகில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
காவல்துறையினரை கண்டதும் பொருள்களை ஏற்றிக் கொண்டிருந்த மர்ம நபர்கள் கடலில் குதித்து தலைமறைவாகி விட்டனர். இதனைத் தொடர்ந்து வாகனத்தை சோதனையிட்டதில் 2,500 கிலோ விரலி மஞ்சள், 1,500 கிலோ பீடி இலை, 150 கிலோ வெங்காய விதையை இங்கிருந்து இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் வாகனங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட பைபர் படகினை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.