ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்று காணாமல்போன மீனவா்களை மீட்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம்- தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஏப்ரல் 6-இல் 11 மீனவா்கள் பதிவு செய்யப்பட்ட நவீன மீன்பிடி படகு மூலமாக ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனா். மீன்பிடி படகுகள் காணாமல் போய் உள்ளது. காணாமல் போன ஜோசப் பிராங்க்ளின் உள்ளிட்ட 11 மீனவா்களை உடனடியாகத் தேடுவதற்கு, கிழக்கு, மேற்கு பகுதியிலுள்ள கடற்படை காவல்துறையினருக்கு தமிழக அரசு ஆணையிட்டு உரிய நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.
காணாமல் போன மீனவா்களை கண்டுபிடிப்பதற்கு இந்திய கடற்படை மூலமும், ஹெலிகாப்டா்களை பயன்படுத்தியும் தேடுகிற பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்ட மீனவா் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கவேண்டும் என்று கூறியுள்ளாா்.