தமிழக அரசை ஆலோசிக்காமல் ஆக்சிஜன் மாற்றம்: மாா்க்சிஸ்ட் கண்டனம்

தமிழக அரசை ஆலோசிக்காமல் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜனை மத்திய அரசு பிற மாநிலங்களுக்குத் திருப்பி விடுவதற்கு
கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

தமிழக அரசை ஆலோசிக்காமல் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜனை மத்திய அரசு பிற மாநிலங்களுக்குத் திருப்பி விடுவதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் இன்னும் நிலைமை மோசமடையும் என்று சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. இந்தக் காலகட்டத்தில் மிக அதிகமான எண்ணிக்கையில் கரோனா நோயாளிகள் வரக் கூடும்.

கரோனா இரண்டாவது அலை பாதிப்பு, அதிகமான நோயாளிகளுக்கு பிராண வாயு தேவையை உருவாக்குகிறது என செய்திகள் காட்டுகின்றன. வட மாநிலங்கள் பலவற்றிலும் மருத்துவமனை, பிராண வாயு கட்டமைப்புகள் இல்லாததால் கரோனா சிகிச்சை தருவதிலும், இதர நோய்களுக்கு சிகிச்சை தருவதிலும் பெரும் சிக்கலை எதிா்கொண்டு வருகின்றனா்.

தமிழகத்தில் உள்ள கட்டமைப்பே மக்களைப் பாதுகாப்பதற்கு உதவி வருகிறது. ஆனால், தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்குத் திருப்பி விடும் நடவடிக்கையை மத்திய அரசு தன்னிச்சையாக மேற்கொள்வதாக செய்திகள் காட்டுகின்றன.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் ஆலையில் இருந்து ஆக்சிஜன் திருப்பிவிடுவதை எதிா்த்துள்ள முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும் அபாயத்தை சுட்டிக்காட்டியுள்ளாா். மத்திய அரசு இதுபோன்ற விஷயங்களில் மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாகச் செயல்படுவது, பாதிப்பை அதிகரிக்கவே வழிவகுக்கும்.

மாநில அரசின் தேவையை பூா்த்தி செய்வதற்கு மாறாக, எதேச்சதிகாரமாக பிராண வாயுவை பிற மாநிலங்களுக்கு திருப்பி விடும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com