தேனி மாவட்டம் கம்பத்தில் உழவர் சந்தை இடம் மாற்றப்பட்டுள்ள நிலையில், 2 நாள் நடைபெறும் வாரச்சந்தையும் ரத்து செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பத்தில் உழவர் சந்தை, வாரச்சந்தை ஆகியவை செயல்பட்டு வந்தது. உழவர் நாள்தோறும் சராசரியாக 30 ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனை ஆகி வந்தது. தற்போது கரோனா தொற்று பரவலால் உழவர் சந்தை ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் மாற்றப்பட்டு செவ்வாய்க்கிழமை முதல் செயல்படுகிறது.
இதேபோல் நகராட்சி வாரச்சந்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் செயல்பட்டு வந்தது. கரோனா தொற்று பரவல் காரணமாக இரண்டு நாள் சந்தையும் ரத்து செய்யப்படுகிறது.
இதுபற்றி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் கண்ணதாசன் கூறியது,
கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக உழவர் சந்தை ஏல விவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டது. தற்போது முழு ஆண்டு தேர்வுகள் எப்போது அறிவிக்கப்படும் என்பதில் சந்தேகம் உள்ளதால் கம்பம் உத்தமபாளையம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் இடம் மாற்றப்பட்டு (செவ்வாய்க்கிழமை) இன்று முதல் செயல்படும் என்றார்.
நகராட்சி சுகாதார அலுவலர் ஏ.அரசகுமார் கூறுகையில்,
உழவர் சந்தையைச் சுற்றிலும் கடைகள் அமைத்து, கடந்த ஆண்டு தொற்று அதிகம் ஏற்படக் காரணம் இருந்தது, தற்போது சாலையோர வியாபாரிகள் உழவர் சந்தையைச்சுற்றி கடைகள் அமைக்கக்கூடாது என்பதால் நான்குபுறமும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
தடையை மீறிக் கடை வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் அவர் கூறுகையில் நகராட்சி வாரச்சந்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செயல்பட்டது, மறு அறிவிப்பு வரும் வரை சந்தை ரத்து செய்யப்படுகிறது என்றார்.