ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், ஸ்டெர்லைட்டை திறக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. கரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் செயல்பட 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதிக்கலாம் என்று முதல்வர் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆனால், அதே நேரத்தில் எந்த காரணம் கொண்டும் ஆலையை நிரந்தரமாக திறக்க அனுமதி வழங்கக்கூடாது பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து பொறியாளர்களை பயன்படுத்திக் கொள்ளலாம், ஸ்டெர்லைட் ஆலையை அரசு எடுத்து நடத்தலாம் என்று கூறியுள்ளார்.
அதேபோன்று, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்கலாம் என்று திமுக தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நிலைமை கருதி கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து அனைத்துக்கட்சிக் கூட்டம் நிறைவு பெற்றது.
கட்சிகள் ஆதரவு தெரிவித்ததையடுத்து, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக திறக்கப்படும் என்று தெரிகிறது.