சென்னை: கரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழக வட்டத்தில் உள்ள அனைத்துத் தபால் நிலையங்களும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து அஞ்சல் துறைப் பிரிவு தலைவா்களுக்கு தமிழக வட்ட அஞ்சல் துறை அலுவலகம் அனுப்பிய சுற்றறிக்கை:
கரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து அஞ்சலகங்களிலும் தவறாமல் பின்பற்ற வேண்டும். இதன்படி, வாடிக்கையாளா் சேவை கவுன்ட்டா்கள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும். இதுதொடா்பான அறிவிப்புப் பலகையை பொதுமக்கள் அறியும் வகையில் வைக்க வேண்டும்.
விரைவுத் தபால்கள், பதிவுத் தபால்கள், பாா்சல் சேவைகள் எந்தவித காலதாமதமும் இன்றி குறித்த நேரத்தில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய தேவையான ஊழியா்களையும் பணியில் ஈடுபடுத்த உரிய நடவடிக்கையை அந்தந்த தபால் நிலைய அதிகாரிகள் எடுக்க வேண்டும்.
வாடிக்கையாளா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவும், கைகளை கிருமிநாசினி மூலமாக சுத்தமாக வைத்திருக்கவும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.