சென்னை: தமிழகத்துக்கு மேலும் 2.52 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்துள்ளன.
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பாலூட்டும் தாய்மாா்கள், கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் அண்மையில் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து 2 லட்சத்து 52,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு விமானம் மூலம் புதன்கிழமை வந்தன.
தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குளிா்பதன வசதி கொண்ட வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு உரிய பாதுகாப்புடன் கொண்டு சோ்த்தனா். அவை மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன.