அரியலூர்: மேக்கேதாட்டு பிரச்னையில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த அங்கனூர் கிராமத்துக்கு வியாழக்கிழமை வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
சோழப் பேரரசின் மாமன்னனாக திகழ்ந்த ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் இன்று எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். அவரைப் போற்றும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களவை மற்றும் மாநிலங்களவையை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு முடக்கி வருவதாக பிரதமர் மோடி கூறுவது மிகப் பெரிய நகைச்சுவையாக உள்ளது. பெகாஸஸ், வேளாண் சட்டம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இருப்பது மக்களவை,மாநிலங்களவை முடங்குவதற்கு காரணமாகும்.
மேக்கேதாட்டு பிரச்னையில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. மேக்கேதாட்டு அணை கட்டக் கூடாது என பாஜக உண்ணாவிரதம் இருப்பது நகைப்புக்குரியது. கர்நாடகாவில் ஆளுகின்ற பாஜகவின் முதல்வரை சந்தித்து மேக்கேதாட்டு அணை கட்டும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தாமல், உண்ணாவிரதம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.
தமிழக அரசு வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் விவசாய பெருமக்களின் பல்வேறு பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் விவசாயம் வளர்ச்சியடைவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும். ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களைப் பெற்ற வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.